Monday, January 31, 2011

அமெரிக்க ஆசை; போலி பல்கலை; அவமானப்பட்ட இந்திய மாணவர்கள்


நம்மூரில் அவ்வப்போது போலி சீட்டு கம்பெனிகள் மக்களை ஏமாற்றுவதும், அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஏழை மாணவிகளிடம் ஏமாற்றி பணம் பறிப்பதும் சாதரணமாக செய்திகளில் அடிபடும்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாட்டில் இம்மாதிரி ஒரு செய்தி கடந்த வாரம் வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகனத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில்  இயங்கி வந்த ட்ரை வாலி யூனிவர்சிட்டி (Tri-Valley University) மிக பெரிய பண முறைகேடு மற்றும் விசா மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு துறையால் குற்றம் சுமத்தப்பட்டு ரெய்டுக்கு உள்ளானதோடு சீல் வைத்து மூடப்பட்டது.   

இதில் படித்து (?) வந்த 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களின் கதி மற்றும் எதிர்காலம் தற்போது அமெரிக்க புலனாய்வு துறையின் சுறுக்கு கயிறில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. மொத்த மாணவர்களில் 95 % மேலானவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் குறிப்பா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

பல்கலையில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் கேட்டால் நமக்கு தலை சுற்றுகிறது. பல்கலை என்ற பெயரில் வெளிநாடுகளில் (இந்தியாவிலிருந்து) இருந்து வரும் மாணவர்களிடம் பெரும் அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு மானாவாரியாக அமெரிக்க மாணவ விசாக்களை அள்ளித் தெளித்திருக்கிறது. பேப்பரில் மட்டுமே மாணவர்கள் பல்கலையில் படிப்பதாக இருந்தது. மற்றபடி விசாவை பெற்றுக்கொண்டு பெரும்பாலானவர்கள் வெவேறு மாநிலங்களில் சென்று அவரவர்களுக்கு கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இது அமெரிக்க சட்டப்படி மிக பெரிய குடிஉரிமை பித்தலாட்டம்.

மாணவ விசாவில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தால் அவ்வப்போது தான் படிக்கும் படிப்பின் முன்னேற்றத்தையும், அவ்வப்போது கல்லூரிக்கு நேரில் சென்று ஆஜர் ஆவதையும் தாங்கள் மாணவர் விசாவில் தொடர தகுதியானவர்கள் என்பதை நிருபிக்கும் பொருட்டு குடியுரிமை துறையிடம் பதிந்துகொன்டே இருக்க வேண்டும். ஆனால் Tri-Valley பல்கலை மாணவர்கள் சிலர் பல்கலை வாசலையே மிதித்ததாக தெரியவில்லை.

பெரும்பாலான மாணவர்கள் இப்பல்கலை பற்றி தெரிந்தே பெரும் பணம் கொடுத்து சேர்ந்துள்ளார்கள் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படியென்றால் இவ்வளவு நாளும் ஏன் அந்த பல்கலை கழகம் செயல்பட அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை. 

மோசடியின் உச்ச கட்டமாக பல்கலையில் சேர்ந்த மாணவர்களின் பாதிக்கும் மேலானவர்களின் இருப்பிட முகவரியாக ஒரே அப்பார்ட்மெண்டின் முகவரி தரப்பட்டுள்ளது.

தற்போது இப்பல்கலையின் மாணவ விசாவில் வந்த அனைத்து மாணவர்களையும் அமெரிக்க புலனாய்வு துறை வலை வீசி ஒவ்வொருவராக தேடி வருகிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்றாலும் முறையாக படிக்க வந்த மாணவர்களாக இருப்பின் அவர்கள் மீண்டும் மற்ற பலகலைகளில் விண்ணப்பித்து தங்கள் படிப்பை தொடரலாம் எனவும் கூறியள்ளது சிலருக்கு பாலை வார்த்துள்ளது.

இதற்கிடையே விசாரணைக்கு என்று ஒரு சில மாணவர்களை தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ள புலனாய்வுத் துறையினர் அவர்களின் கால்களில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் கருவி ஒன்றை கட்டிக்கொள்ள செய்துள்ளது இந்திய சமுதாயத்தினரிடையே பெரும் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் இப்படி காலில்  நடமாட்டத்தை கண்காணிக்கும் கருவிகளை கட்டி விடுவது ஒன்றும் எங்களுக்கு புதிதில்லை. அதே நேரம் இப்படி காலில் கருவியை கட்டி கொள்வதால் மட்டும் அவர் குற்றவாளியாகவோ அல்லது குற்றம் புரிந்தவராகவோ ஆகிவிட முடியாது என சப்பை கட்டு கட்டுகிறார்கள். நமக்கு நினைத்தாலே அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. 

இதைபற்றி இந்திய அரசு தங்கள் ஆட்சேபனையை சற்று கடுமையாகவே தெரிவித்துள்ளது. ஆனால் நிலைமை மாறியதாக தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பிரச்சனையில் யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை.

தெரிந்தே பணம் கொடுத்து ஏமாந்த அமெரிக்கா செல்ல ஆசைப்பட்ட மாணவர்களா? அல்லது தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்ட பல்கலையா? இல்லை இதையெல்லாம் கண்காணிக்க மறந்த அமெரிக்க அதிகாரிகளையா? 




share on:facebook

Wednesday, January 26, 2011

தாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50



ரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால தாய் பாலா நம்பி ... என்று. ஆனால் இபோதெல்லாம் 1 %, 2 % மாட்டு பால் போல் தாய்ப்பாலும் சுலபமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. என்ன விலைதான் கொஞ்சம் அதிகம். ஒரு அவுன்ஸ் $ 3.50 (ஒரு அவுன்ஸ் தோராயமாக 30 ml).

சமீபத்தில் MPR எனப்படும் மினசோட்டா பப்ளிக் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை கேட்ட போது உண்மையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆச்சர்யம் மட்டுமில்லாமல் இதெல்லாம் நல்லதா கெட்டதா என எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்களேன்...

பல நூறு/ஆயிரம் ஆண்டுகளாக குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் ஊட்டுவது நம் கலாச்சாரம். இன்னும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர எனக்கு தெரிந்து பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அப்படியில்லை. தாய்பால் ஊட்டுவதை தங்கள் கடமை என நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் தற்போது அங்குள்ள தாய்மார்களும் தாய்ப்பாலின் அருமையை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இது நல்ல விஷயம் தான் என்றாலும் தாய்ப்பாலையே அவர்கள் பாணியில் சந்தைபடுத்தி இருப்பதை என்னும்போது தான் வேதனையாக இருக்கிறது.


ஆம் தற்போது அமெரிக்காவில் தாய்பால் விற்பனை என்பது சர்வசாதாரணமா நடக்கிறது. ஒரு அவுன்ஸ் தாய்பால் $ 1.50 இருந்து $ 3.50 வரை விற்கபடுகிறது. சில தாய்மார்கள் இலவசமாகவும் தங்களின் தாய்பாலை தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு  தந்து உதவுகிறார்கள்.

நீங்கள் என்ன கேக்க போகிறீர்கள் என எனக்கு தெரியும். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மற்றவர்களின் தாய்பால் மூலம்  கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறதே என்று தானே? அதற்க்காகதான் தாய்பாலை வாங்கும் முன் அந்த தாயின் medical history மற்றும் blood test results என அனைத்து வகையான பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொண்டு தான் தாய்பாலை வாங்குகிறார்கள். இருந்தும் அரசாங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் இது சற்று ஆபத்தான விஷயம் என்கிறார்கள்.  

இதைப்பற்றி தாய்பால் வாங்கும் ஒரு தாயிடம் கேட்டபோது, பாலை விற்கும் தாயின் உடல்நலத்தை தெரிந்து கொள்வதோடு அந்த தாயின் குழந்தைகளின் உடல் நலத்தை பற்றியும் தெரிந்து கொண்டுதான் நான் பாலை வாங்குகிறேன். பாலை கொடுக்கும் தாயின் குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருந்தால் என் குழந்தையும் புஷ்டியாக தானே வளரும் என கூறுகிறார்.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பாலைத்தான் அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஒரு மிக சிறந்த உதவி/தியாகம் என்றே கூறலாம். சிலர் அதற்காக காசு கூட வாங்குவதில்லை என்பதும் உண்மை.

வெகுதூரம் பயணத்தில் இருந்த தாய் ஒருவர் தன் குழந்தை பாலுக்காக அழுவதை கண்டு ஆன்லைனில் பக்கத்தில் ஒருவர் தாய்ப்பால் தருவதை அறிந்து அவரிடம் தொடர்புகொண்டு போகும் வழியிலேயே அவரின் கணவர் கூலர் பெட்டியில் கொண்டு வந்து கொடுத்த தாய்பாலை தன் குழந்தைக்கு கொடுத்ததாக தன் பெட்டியில் தெரிவித்தார்.

பெரும்பாலான breast milk trading ஆன்லைன் மூலமாக நடக்கிறது. பதிவு செய்யப்பட்ட தாய்பால் சேமிப்பு கிடங்குகள் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்ப்பட்ட இடங்களில் செயல்படுகிறது. மற்றபடி ஒன்றிரண்டு மாகாணங்களில் (நியூயார்க், கலிபோர்னியா) தாய் பால் விற்பனை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்ப சொல்லுங்கள்...தாய்பால் விற்பனை நல்லதா கெட்டதா?

ஆமா, சென்னையில் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பாமே! சமீபத்தில் NCRB வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இல்லாத நகரங்களின் வரிசையில் கடைசி இடத்திற்கு முன் இடத்தை சென்னை பிடித்திருக்கிறது. கடைசி இடம் தன்பாத்துக்கு. கடைசியாக இருந்தாலும் இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே!


share on:facebook

Sunday, January 23, 2011

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கணவில்...



பொதுவாகவே நான் என்னுடைய வலைதளத்தில் தொடர்ந்து (மற்றவர்களை போல) எழுத முடிவதில்லை. அதே போல் பிற வலைதளங்களுக்கு வழக்கமாக விசிட் அடித்தாலும் பதிவுகளை படித்த பிறகு அதற்கு ஒரு பின்னூட்டமோ அல்லது கமென்ட் போடவோ நேரமின்றி அப்படியே போட்டாலும் அவர்களின் பதிவே பழையதாக போனபிறகுதான் என் கமென்ட் அங்கு ஏறும்.



இதையெல்லாம் தாண்டி தற்போது எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் என்னை மேலும் முடக்கி போட்டுவிடுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.

ஒரு நிமிடம் கண்களை மூடி நாம் ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம் முடிவில் என்ன ஆக போகிறது என நினைத்தால் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையே நமக்கு முன்னால் ஒரு கேள்விகுறியாகிப் போகிறது.

நேற்று இருந்தவர் இன்று இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பாரா தெரியவில்லை. அதை செய்யக்கூடாது இதை செய்தால் கெடுதல் என கூறுகிறோம். இது எதையும் செய்யாமலேயே சிலருக்கு எல்லா வியாதிகளும் வருகிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை.

வெளிநாட்டில் பலகாலம் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என் பாசமிகு சகோதிரியின் கணவர் எங்களையெல்லாம் மீளா துயரத்தில் விட்டுவிட்டு போய்விட்ட என் அத்தான், பலவருட வெளிநாட்டு வாசத்திற்கு பிறகும் தாய் நாடு திரும்பி இந்தியாவின் முதுகெலுமாம் விவசாயத்தில் நாட்டம் கொண்டு அதை நவீன உத்திகள் கொண்டு திறம்பட நடத்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று வந்த மாரடைப்பு காரணமாக சென்ற வாரம் எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

நான் மேலே கூறியதை போல் எந்த ஒரு தீய பழக்கங்களும் இன்றி தினமும் உடல் உழைத்து வந்தவர். அவருடைய ஆத்மா சாந்தியடையவும் என் சகோதிரி மற்றும் அவரின் குழந்தைகளுக்கு மண தைரியம் கிடைக்கவும் இறைவன் ஒருவன் இருந்தால் அவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஒன்றே ஒன்று நண்பர்களே...இருக்கும் வரை சந்தோசமாகவும் ஏதோ நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாகவும் இருங்கள்...Life is short. Live as much.




share on:facebook

Sunday, January 16, 2011

தென்மேற்கு பருவக்காற்று - பொய்க்கவில்லை


தென்மேற்கு பருவக்காற்று - 

தமிழ் சினிமா உலகம் என்பது பிரமாண்டம், மாஸ் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம் மட்டுமே அடங்கிவிடவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த எல்லோரும் பார்க்க கூடிய ஒரு நல்ல தமிழ் படம்.


வழக்கம் போன்ற கதைதான். ஆனால் அதை சொன்ன விதமும் தேர்வு செய்த கதாபாத்திரங்களும் தான் தென்மேற்கு பருவக்காற்றை இதமாக வீச வைத்திருக்கிறது.

ஹீரோ சேது: ஐம்பது அறுபது வயதில் அதை மறைப்பதற்காக ரோஸ் பவுடரையும் ஏன் ஒரு சில நடிகர்கள் கண்களுக்கு மை எல்லாம் தீட்டிக்கொண்டு கல்லூரி மாணவனாக நடிப்பதை பார்த்து பார்த்து அலுத்து போய் இருக்கும் நேரத்தில் அசல் கிராமத்தானாக முரட்டு பார்வையும், நிமிர்ந்த நெஞ்சுமாய், கட்டில் அடங்கா காளையாக வளைய வரும் கதாநாயகன் சேது தனக்கு கிடைத்த பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்.


தந்தை இல்லா பிள்ளையாக, ஒரு ஊதாரியாக சுற்றிவரும் கதாநாயகன் சேது தன் ஆட்டு பட்டியில் ஆடு திருட வரும் கும்பலை வளைத்து பிடிக்கும் போது ஏற்படும் திருப்பம் தான் கதைக்கு ஆரம்பம் என சொல்லலாம்.

ஹீரோயினாக வருபவர்கள்  திருடனையும், போக்கிரியையும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் படங்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதில் சற்றே மாற்றம். திருடியாக ஹீரோயின் வருகிறார்.  

ஹீரோயின் வசுந்தரா: கிராமத்து ஹீரோயினாக அழகாக வந்து போகிறார். அதுமட்டுமில்லாமல் எங்கே தன்னை திருடி என எல்லோர் முன்னாடியும் காட்டி கொடுத்துவிடுவானோ என வெளிறி போய் நிற்கும் காட்சியாகட்டும், அழகாக ஒன்றிரண்டு காட்சிகளில் காதல் மொழி பேசுவதில் ஆகட்டும் தன் பங்கை கச்சிதமாக முடித்திருக்கிறார்.

சரண்யா: ஏற்கெனவே பல படங்களில் குணசித்திர வேடங்களில் தன் முத்திரையை பதித்தவர். இந்த படத்திலும் அருமையாக நடித்துள்ளார். ஒரு பாசமுள்ள அம்மாவாக, வைராக்கியமுள்ள விதவை தாயாக படம் பூராவும் ஒவ்வொரு காட்சியிலும் நம் மனதில் நிற்கிறார்.

டைரக்டர் சீனு ராமசுவாமி தான் படத்தின் உண்மையான ஹீரோ. சுவிசிலும், ஹவாய் தீவிலும் ஒன்றிரண்டு பாடல் காட்சிகள், மாடர்ன் ஹீரோ, அரை குறை ஆடை போட்ட ஹீரோயின் காம்பிநேசன் என எதுவும் படத்தில் இல்லாமல், அழகாக வயல் வெளி, மண் சாலை, பூசப்படாத சுவர்கள் கொண்ட கிராமிய வீடுகள் என்று படத்தில் சிறிதும் அதீத கற்பனை கலப்பு இன்றி படத்தை எடுத்துள்ளார்.

காமெடி என சொல்லிக்கொண்டு படத்தின் கதைக்கு சம்மந்தமே இல்லாமல் தனியாக டிராக் வைக்காமல் படத்தினூடே ஆங்காங்கு இயற்கையாக காமெடி கலந்துள்ளது. ஓரிரு இடங்களில் நல்ல கருத்துக்களையும் இயல்பாக சொல்லியிருகிறார். ஒரு பக்கம் செழுமையையும் மறு பக்கம் வறுமையையும் இயற்கையே கொடுத்திருந்தாலும் நாம அத மாத்தணுமா இல்லையா? என்கிறபோதும், பழிவாங்கும் உணர்ச்சி வந்துச்சுனா வாழ்க்கையை நல்ல விதமா அனுபவிக்க முடியாது என்று கடைசியில் முடிக்கும் போதும் பளிச்சென தெரிகிறார் டைரக்டர்.

ஆனா ஒரே ஒரு குறை. அது ஏன் ஒரு கிராமிய படம் என்றால் அதில் வரும் எல்லா ஹீரோக்களும் ஒன்றுக்கும் உதவாத தறுதளைகலாகவும், குடித்துவிட்டு  ஊர்சுற்றும் குடும்பத்துக்கு அடங்காதவர்களாகவும் காண்பிக்கிறார்கள்? இது கிராமங்களை பற்றிய ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடாதா?

பி. கு. சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. சரி அதை பகிர்ந்துகொள்ளலாமே என்றுதான்...

ஆமா பொன்வண்ணன் படத்துல எங்க வராரு?

அன்புடன்...
share on:facebook

Friday, January 14, 2011

மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஜெர்மனி நாட்டில் 1770 இல் பிறந்த பேத்தோவன் (Ludwig van Beethoven) மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் தன் முத்திரையை பதித்தவர். தன் இருபதாவது வயதில் காதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கேக்கும் திறனை இழக்க ஆரம்பித்து சிறுது காலத்தில் கேக்கும் திறனை முழுவதும் இழந்த பிறகும் கூட தானே பாடல் இயற்றி இசை அமைத்து அதை அரங்கேற்றம் செய்வதை நிறுத்தவில்லை.

விடிய விடிய இசை/பாடல் அமைக்கும் போது தூக்கம் வராமல் இருக்க குளிர்ந்த தண்ணீரில் தன் தலையை முக்கி தூக்கத்தை களைத்துக்  கொள்வாராம்.


அவருடைய இனிமையான ஒரு இசை தொகுப்பு இங்கே (என்ன பிரமாண்டம் பாருங்கள்)...இசையை கேட்ட பிறகு இதை ஏதோ ஒரு இந்திய/தமிழ் சினிமா பாடலாக கேட்ட மாதிரி இருக்கிறதா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. ஆனால் எந்த படத்தில் இதை காப்பி அடித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்களேன். மண்டை காய்கிறது.




அதே போல் இந்த இசையையும் நீங்கள் பல இடங்களில் கேட்டிருக்கலாம். காரின் ரிவர்ஸ் அலாரமாக, வீட்டின் காலிங் பெல் இசையாக. ஹ்ம்ம்..ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.




நன்றி: You Tube.   
அன்புடன்...
share on:facebook

Tuesday, January 11, 2011

என் ஜோடி மஞ்ச குருவி...



அண்ணாதுரை? மர்த் டப்பிங் மாவீரன் சார்.

கிரிதரன்? விக்ரம் சார்.

சுப்பிரமணி? என் ஜோடி மஞ்ச குருவி சார்.

என்ன ஒண்ணும் புரியலையா மக்கா? வகுப்பாசிரியர் வருகை பதிவு (attendance) எடுக்கும் போது ஒவ்வொருவர் பெயராக கூப்பிடும் போது 'எஸ் சார்' என கூறுவதற்கு பதிலாக அப்போது வந்த திரை படங்களின் பெயரையோ, பாடலின் பெயரையோ பதிலாக கூறி வகுப்பசிரியரை குழப்பி/திகலடைய செய்வது எங்களுக்கெல்லாம் ஒரு விளையாட்டு.


தஞ்சை தரணியில் அப்படி ஒன்றும் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய பள்ளி அல்ல அது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் அப்போதே உண்டு. 'அரசர் மேல்நிலை பள்ளி'. ஆம், பெயரிலேயே அரசரை தாங்கி இருந்த பள்ளி அது. அமெரிகாவில் பிறந்து வளரும் இந்திய குழந்தைகள் போல் அது ஒரு வித்தியாசமான பள்ளி.


1 . அரசுப் பள்ளியாகவும் இல்லாமல் தனியார் பள்ளியை போலும் இல்லாமல் 'சத்திரம் அட்மினிஸ்ரேசன்' என்று மாவட்ட கலெக்டரின் நேரடிப் பார்வையில் இயங்கிய ஒரு டிரஸ்டின் பள்ளி.

2 . பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே, ஆனால் பிளஸ் ஒன் பிளஸ் டூ மட்டும் ஆங்கில மீடியமும் உண்டு.

3 . மேலும் அது மட்டுமே தஞ்சை நகரத்தில் அப்போதிருந்த ஒரே கோ எஜுகேசன் பள்ளி. ஹி ஹீ... 

4 . எனக்கு தெரிந்து தஞ்சை மாவட்டத்திலேயே காமர்ஸ் குரூப்  ஆங்கில மீடியத்தில் போதிக்கப்பட்ட ஒரே பள்ளி.

5 . Last but not the least நான் அங்கே படித்தேனாக்கும். இன்னொரு ஹி ஹீ...

அரசுப் பள்ளியை போன்றதானாலும் எங்கள் பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் அறிவு ஜீவிகள், முத்துக்கள் என்றே சொல்லலாம். இல்லையென்றால் நான் இங்கு அமெரிக்காவிலோ, அல்லது என் பள்ளித்தோழர்கள் இன்று அடிட்டர்களாகவும், பேராசிரியர்களாகவும் பெரிய பிசினஸ்மேன்களாகவும் ஆகியிருக்க முடியாது.


கழுதை கெட்டால் குட்டிச்சுவர் போன்று வழக்கம் போல் வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சை தேய்த்துக்கொண்டிருப்போம். அது என்னவோ தெரியவில்லை, பள்ளியில் எல்லா லூட்டியும் அடித்தாலும் கூட, எங்கள் குழுவில் குறிப்பிட்ட நான்கைந்து பேர் மட்டும் இரவானால் க்ரூப் ஸ்டடி போட்டு தேர்வுகளில் மட்டும் மாணவிகளுக்கு போட்டியாக சில சமயங்களில் அவர்களை விட அதிக மதிப்பெண்களை கூட எடுத்து விடுவோம். இதனாலோ என்னவோ நாங்கள் எவ்வளவுதான் குறும்பு செய்தாலும் எங்களை மட்டும் ஆசிரியர்கள் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவே நாங்களும் படிப்பை கோட்டைவிடாமல் நன்றாக பிடித்துக் கொண்டதற்கு ஒரு காரணம்.


நான் பள்ளியில் (பிளஸ் ஒன்) சேர்ந்த முதல் நாளே வகுப்பறையில் மயக்கமடித்து விழுந்து விட்டேன். அதுவும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண்கள் முன்பு. அதுவும் ஒரு நல்லதாக போய்விட்டது. ஒரே நாளில் அதுவும் முதல் நாளிலேயே நான் பிரபலமாகிவிட்டேன். ஆரம்பத்தில் என்னை பரிதாபமாக பார்த்த பெண்கள் பிறகு அடாவடி கும்பல் ஆன பிறகு திரும்பி கூட பார்பதில்லை. இருந்தாலும் விடுவோமா நாம்?


T. ராஜேந்தர் படத்தில் வருவது போல் வழக்கமான ஒரு தலை காதல்கள் நிறையவே இருந்தது. ஒரே பெண்ணை இருவர் சுற்றி வந்தோம். இருவரும் பொட்டு வைத்திருப்போம். அதாவது திருநீர் மாதிரி. நம்ம வில்லன் சந்தனப்பொட்டு வைத்திருப்பார். நான் (ஹீரோ!) சாந்துபொட்டு வைத்திருப்பேன். ஆனால் இருவருக்குமே அந்தப் பெண் கடைசியில் நாமத்தை போட்டது தனிக்கதை.


எங்கள் ஆசிரியர்களில் நாங்கள் மிகவும் மரியாதை வைத்திருப்பது (இன்றும் கூட) T.P.M. என்று சொல்லக்கூடிய திரு. T. பிச்சைமாணிக்கத்தை. நல்ல ஆங்கிலம் பேசக்கூடியவர், பார்க்க மிகவும் டெரராக இருப்பார். அவர் அக்கவுண்டன்ட்டன்சி பாடம் எடுத்தால் இன்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காலாம். அப்படி ஒரு லைவாக மாணவர்களையே உதரணாமாக கூறி ஒவ்வொரு வகை அக்கவுன்ட்ச்சையும் பாடமெடுப்பார்.


நடு இரவில் தட்டி எழுப்பி 'What are the three types of accounts' எனக்கேட்டால் கூட சொல்ல வேண்டும் என்று அன்று அவர் எங்களுக்கு சொல்லிகொடுத்த விதம் இன்றும் நான் கூறுவேன். Personal, Real and Nominal accounts என்று. மற்ற ஆசிரியர்களும் ஆற்றலில் ஒன்றும் குறைவானவர்கள் இல்லை. செங்குட்டுவன், எழிலரசன், சோ கா (சோ. கனகசபாபதி) என பலரும் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தார்கள்.

தமிழ் மேல் இருந்த பற்றின் காரணமாக இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அரசியல் வியாதிகள் கூறியதை கேட்டு பள்ளியில் strike எல்லாம் செய்து ஹீரோவாக காட்டிக்கொண்ட கதையெல்லாம் உண்டு. இன்று என் பிள்ளைகளை இந்தி தெரிவது அவசியம் என தனியாக படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன். அனேகமாக இதை தமிழர்கள் எல்லோரும் தற்போது உணர்ந்து விட்டார்கள். தமிழக அரசியல் வியாதிகளை தவிர.


Leadership qualities என்று சொல்லக்கூடிய தலைமை பண்புகளை முதலில் கற்றுக்கொண்டது எனது பள்ளியில் தான். Interact club என்ற அமைப்பிற்கு வழக்கமாக ஆசிரியர்க்கு பிடித்த/வேண்டிய பையன்களை தான் அதுவரை தலைவராக நியமித்து வந்தார்கள். முதன் முதலாக நான் தான் அதுவரை அன்னபோஸ்ட்டா நிரப்பிய அந்த பதவியை நானும் நிற்க போகிறேன் என்று ஆசிரியர்களிடம் வாதாடி தேர்தல் வைத்து அதில் வெற்றியும் கண்டேன். நான் இதை இங்கு குறிப்பிட காரணம் அதன் பிறகு வரிசையாக கல்லூரியிலும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் முதல் ஆளாய் கை தூக்கும் பழக்கமும் தைரியமும் எனக்கு ஏற்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக என் தாய் தந்தை மற்றும் என் நண்பர்கள் என அனைவரும் எனக்கு என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்ததும் உண்மை.

பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு சென்று வருவது என்பது எங்களுக்கெல்லாம் அப்போது ஒரு வீர விளையாட்டு மாதிரி. இப்போ மாதிரி வீட்டில் இருந்தபடியே நினைத்த போது சினிமா பார்க்கும் வசதி அப்போதில்லை. எல்லா சினிமாவிற்கும் வீட்டில் காசும் கொடுக்கமாட்டார்கள். அனுமதியும் இருக்காது. ஒரு தடவை ஒரு பிரபலமான மலையாள (இயக்குனரின்!) படத்தை பார்க்க கட் அடித்துவிட்டு சென்றோம். இடைவேளையில் காண்டீன் பக்கம் போன என் நண்பன் அலறி அடித்துக்கொண்டு உன்ளே ஓடி வந்தான். என்னடா உங்க அப்பா கிப்பா யாராவது பாடம் பார்க்க வந்திருகிறார்களா? என கிண்டலாக கேட்டோம். இல்லைடா. நம்ம ஹய் ஸ்கூல் வாத்தியார் ..... பாடம் பார்க்க வந்திருக்கார்டா என முகம் வெளிறி போய் கூறினான். ஊம்ம் இதுதானா...அட போடா. நீயே அவர் முன்னாள் போய் நின்னால் கூட அவர் தான் உன்னை கண்டு ஒளிவார். ஏன்னா அவரே கிளாசை கட்டடித்துவிட்டு தான் அதுவும் இந்த படத்திற்கு வந்திருக்கார் என நாங்கள் கூறியதை மெதுவாக புரிந்து கொண்ட பிறகு தான் அவன் முகமே தெளிவானது. பிறகு பல நாள் எங்களை பார்த்தாலே அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார்.


இம்ம்...இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அது ஒரு கனாக் காலம்...

நன்றி படம்: flickr.com




share on:facebook

Friday, January 7, 2011

புத்தாண்டில் ஒரு புண்ணியம்

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டு தினத்தன்று பலரும் பலவிதமாக புது வருடத்தை வரவேற்றிருப்பார்கள். புத்தாண்டு உறுதிமொழி என்பது ஜாதி மத பேதமின்றி உலகெங்கும் உள்ள பல தரப்பு மக்களும் எடுத்துக்கொள்ளும் ஒரு நல்ல விஷயம். சிலர் உறதி எடுத்துக்கொண்ட முதல் நாளே இன்று புத்தாண்டு ஆதலால் நாளை முதல் தான் உறுதிமொழி செயல்படுத்தப்படும் என்று அன்றே எடுத்த உறுதியை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம். உண்மையான மகிழ்ச்சி என்பது நம் மனதளவில் ஏற்படுவது. நாம் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல் வெளியில் காட்டிக்கொள்ளலாம். ஆனால் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருக்கின்றோமா என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். புத்தாண்டு போன்ற தினங்களில் இது போன்ற மகிழ்ச்சி ஓரளவிற்கு எல்லோருக்கும் ஏற்படும். நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்க்கும் போது அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

ஆனால் அப்படி ஒரு சுற்றமும் நட்பும் இன்றி அதரவற்றவர்களாக பல சிறார்களும் முதியவர்களும் இன்று பல சேவை இல்லங்களில் தங்கள் வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டும் பொங்கலும் ஒன்றுதான் - யாராவது வந்து அவர்களிடம் அன்பு காட்டும்வரை.

சென்ற வருடம் இந்தியாவில் இருந்தபோது எங்கள் நிறுவனத்தின் சார்பில் தீபாவளி அன்று சென்னையில் உள்ள ஒரு அதரவற்ற சிறுவர் நிலையத்தில் அவர்களுடன் தீபாவளியை கொண்டாடும் விதமாக ஒரு குழு அவர்களுக்கு புத்தாடை, பட்டாசுகள் இனிப்புகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை அவர்களுடனேயே தீபாவளியை கொண்டாடினோம். மாலை அவர்களிடம் இருந்து விடைபெறும் போது ஏதோ நம் வீட்டுப்பிள்ளைகளை விட்டுவிட்டு பிரிவதை போல் ஒரு மண இறுக்கம். அவர்களும் நாள் முழுவதும் மாமா, அங்கிள் ஆண்டி என எங்களுடன் உறவாடிவிட்டு நாங்கள் கிளம்பிய பிறகு ஏற்படபோகும் வெறுமையை நினைத்தோ என்னவோ அவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வெளியில் வரும்போது சேவை இல்லத்தின் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, இப்போதெல்லாம் ஓரளவு எங்களுக்கு உதவிகள் வருகிறது ஆனால் இவ்வாறு யாராவது வந்து அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டால் மட்டுமே இங்கிருப்பவர்களிடம் உண்மையான மகிழ்ச்சியை காணமுடிகிறது என கூறியது உண்மை என்றே எங்களுக்கு தோன்றியது.

இன்று CSR - Corporate Social Responsibility எனப்படும் சமூக பொறுப்புகளை பல பெரிய நிறுவனங்கள் எடுத்து செய்துகொண்டிருக்கிறது. அதே போல் தனிப்பட்ட நபர்களும் சிலர் வெளியில் தெரிந்தும் சிலர் வெளியே தெரியாமலும் இம்மாதிரி பணிகளை செய்து கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் நான் கூறியபடி நம்மால் முடிந்தால் என்றாவது ஒரு நாள் இவ்வாறு சேவை நிலையங்களுக்கு சென்று வந்தால் நமக்கும் ஒரு புண்ணியம் நிச்சயமாக கிடைக்கும்.

இதேபோல் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் இன்னும் ஒரு பிரிவு, பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து படித்து வாழ்கையில் முன்னேற துடிக்கும் திறமையுள்ள ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவிகள். அவ்வப்போது பத்திரிக்கைகளிலோ வலை தளங்களிலோ வரும் செய்திகளை பார்த்து பலரும் தங்களால் முடிந்த உதவிகளை இவ்வாறான ஏழை மாணவர்களுக்கும், உதவி தேவைப்படும் (அரசு) பள்ளிகளுக்கும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் நாம் உதவிகளை செய்ய நினைத்தும் முழுமையான விபரங்கள் இன்றி எங்கு யாருக்கு எப்படி உதவி செய்வது என தெரியாமல் விட்டுவிடுபவர்களும் உண்டு. அவ்வாறு உங்களுக்கு உதவி செய்ய தோன்றினால் வலை உலக நண்பர் சாய்ராமின் வலைதளத்திற்கு சென்று நீங்களும் உதவிகள் செய்யலாம்.

தான் படித்த பள்ளியை மறக்காமல் இன்றும் உதவிகளை செய்துவரும் நண்பர் சாய்ராம் Really Great.

புத்தாண்டில் முதல் பதிவாக இந்த பதிவை போடவேண்டும் என்றே காத்திருந்தேன். ஏதோ நம்மால் ஆன முயற்சி. புத்தாண்டில் ஒரு புண்ணியம்.



நன்றியுடன்.....
share on:facebook